ஒருநாள் சில அன்பர்கள் ஜீவகாருண்யத்தைக் குறித்து நெடுநேரம் வாசாஞானமாய்ப்
(முடிவு தெரியாமல்) பேசிக்கொண்டே இருந்தார்கள்.
அவற்றை அறிந்த வள்ளலார் ஜீவகாருண்யம் எவ்வளவு தூரம் பரந்துள்ளது என்பதை அறிவீர்களா ? என்று கேள்விகேட்டு அதற்கு விளக்கம் சொன்னார்.
தெருவில் பெரியோர் இருவர் செல்லும்போது. ஒருவர் கால்பட்டு ஒரு மண்கட்டி உடைந்துவிட்டது
அதைக்கண்ட மற்றொருவர் மூர்ச்சையாயினர் மற்றொரு பெரியவர் மூர்ச்சையானவரைக் காரணம் கேட்க.
தமது கால்பட்டு மண்கட்டியின் இயற்கை நிலையாகிய நேர்த்தி குலைந்துவிட்டது அதனால் மூர்ச்சியாகிவிட்டேன் என்றனர்.
அவ்வாறு ஜீவகாருண்யத்தின் எல்லையை அவர்களுக்கு வள்ளலார் விளக்கினார்.
உணவு வழங்குவது மட்டுமே ஜீவகாருண்யம் ஆகாது
எல்லா உயிர்களுக்கும் பசி பொதுவானது. அது இறைவனால் கொடுக்கப்பட்ட
உபகாரக்கருவி என்பதாகும்.
பசி முதலிடம் வகிக்கிறது. பசியைப் போக்குவது அடிப்படை செயலாகும்
பசி.பிணி.தாகம்.
இச்சை.எளிமை.
பயம். கொலை என ஏழுவகையான துன்பம் ஒவ்வொரு ஜீவனுக்கும் வருகிறது இவையாவையும் அவரவர் தரத்திற்கு தகுந்தவாறு போக்குவதே ஜீவகாருண்யம்.
அருள் பெருவதற்கு உணவு வழங்குவது மட்டும் போதாது. எல்லா உயிர்கள் மீதும் இரக்கமும் ( பரோபகாராமும்) இயற்கை உண்மைக் கடவுளான அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் மீது அன்பும் (சத்விசாரம்) அதாவது இடைவிடாது தொடர்பும் கொள்ள வேண்டும்.
நமது ஆன்மநேய அன்பர்கள் உணவு வழங்கினால் மட்டும் போதுமானது என நினைந்து உணவு வழங்கி வருகிறார்கள். மேலும் கடவுள் ஒருவரே அவரே அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் !
என்பதை உணர்ந்து நமது உயிர்மூச்சாக ஒரே கடவுள் கொள்கையைப் பின்பற்றி வழிபடவேண்டும்.
(வேறு ஜட தத்துவ கடவுள்களை வழிபட்டால் அருள் கிடைக்க வாய்ப்பே கிடையாது என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்)
வள்ளலார் பாடல்!
” ஆதியும் அந்தமும் இல்லா அருட்பெருஞ்ஜோதி தன்னையே நினைமின்கள் சுகம் பெற விழைவீர்.
இது நீவீர் மேலேறும் வீதி மற்றை வீதிகள் கீழ் செல்லும் வீதி ! “
வள்ளலார் பாடல்!
” மண்ணுல கதிலே உயிர்கள்தாம் வருந்தும் வருத்தத்தை ஒருசிறி தெனினும்
கண்ணுறப் பார்த்தும் செவியுறக் கேட்டும் கணமும் நான் சகித்திடமாட்டேன்
எண்ணுறும் எனக்கே நின்னருள் வலத்தால் இசைத்தபோ திசைத்தபோ தெல்லாம்
நண்ணும் அவ் வருத்தம் தவிர்க்கும் நல் வரந்தான் நல்குதல் எனக்கிச்சை எந்தாய்.! “
இறைவனால் படைக்கப்பட்ட எல்லா உயிர்களையும் தம் உயிர்போல் பாவிக்க வேண்டும். எல்லா உயிர்களையும் உடம்பையும் இயக்கும்
நமது சகோதர ஆன்மாக்கள் என்பதை அறிவாலே அறிந்து ஆன்மநேய ஒருமைப்பாட்டு உரிமையுடன் வாழ்வதே ஜீவகாருண்ய ஒழுக்கமாகும்.
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க!
கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !