வேட்டவலம் ஜமீனில் நோயும் பேயும் விரட்டி அற்புதம் நிகழ்த்திய வள்ளலார்!

வள்ளல்பெருமான் செய்த அற்புதங்களில் புதுமையானது

வேட்டவலம் ஜமீன்தார் அப்பாசாமி பண்டாரியார் அவர்களுக்கு இரண்டு மனைவிகள்.

முதல் மனைவிக்கு குழந்தை பாக்கியம் இல்லாத்தால் இரண்டாவதாக மணம் முடித்துக்கொண்டார். 

ஒரு மனைவிக்கு பிரம்மராட்சசி என்ற பேயும். ஒருமனைவிக்கு மகோதரம் என்ற தீராத வயிற்றுவலியும் வந்து விட்டது. 

இரண்டு மனைவிகள் இருந்தும் வசதி வாய்ப்புக்கள் நிறைந்து இருந்தும் ஜமீன்தாரர் என்ற பெருமை இருந்தும் வாழ்க்கையில். நிம்மதி இல்லை மகிழ்ச்சி இல்லை. துன்பங்கள் நிறைந்து வேதனையுடன் வாழ்ந்து கொண்டு இருந்தார்.

பிரம்ம ராட்சசி பேய் பிடித்த மனைவியின் பேய் ஓட்டுவதற்காக நிறைய பூசாரிகளை வரவைத்து மேளம் தாளம் பம்பை உடுக்கை கொம்பு போன்ற தோல் கருவிகளைக் கொண்டு சத்தங்களை எழுப்பி பேய் ஓட்டிப் பார்த்தார்கள்.

மேலும் சிறுதெய்வங்கள் பெயரால் ஆடு மாடு பன்றி கோழி போன்ற உயிர் இனங்களை பலி (காவு)கொடுத்தும் பொங்கல் வைத்து படைத்து வழிபாடு செய்து வேண்டியும் பேய் அகன்றபாடில்லை.

அடுத்து தீராத வயிற்றுவலியால் துன்பப்படும் மனைவிக்கு சிறந்த மருத்துவர்களை கொண்டு மருந்து கொடுத்தும் .

மந்திரவாதிகளால் தந்திர மந்திரங்கள் சொல்லியும் வயிற்றுவலி தீர்ந்தபாடில்லை.

மேலும் பலபேர் பலவிதமாக சொல்லக் கேட்டும் எல்லா முயற்சியும் செய்து பார்த்தும் ஜமீன்தாரின் குடும்பத்தின் துன்பம் நீங்கவில்லை. 

வள்ளலார் வருகை

வள்ளலார் மகிமையை பிறரால் அறிந்த ஜமீன்தார் வள்ளல்

பெருமானை அழைத்து வரும்படி தகுதியானவரை வடலூருக்கு அனுப்பினார்.

கருணையே வடிவமான வள்ளலார். வேண்டுகோளுக்கு இணங்க வேட்டவலம் ஜமீன் மாளிகைக்கு வருகை புரிந்தார்.

வள்ளலார் பாடல் !

” மண்ணுல கதிலே உயிர்கள்தாம் வருந்தும் வருத்தத்தை ஒருசிறி தெனினும்

கண்ணுறப் பார்த்தும் செவியுறக் கேட்டும் கணமும் நான் சகித்திடமாட்டேன்

எண்ணுறும் எனக்கே நின்னருள் வலத்தால் இசைத்தபோ திசைத்தபோ தெல்லாம்

நண்ணும் அவ் வருத்தம் தவிர்க்கும் நல் வரந்தான் நல்குதல் எனக்கிச்சை எந்தாய்.! “

உயிர் இரக்கத்தின் வடிவமாக வாழ்ந்து கொண்டு வரும் வள்ளலார் வேட்டவலம் செல்கிறார்.

ஜமீன்தாருக்கு சந்தேகம்

வள்ளலார் வருகை அறிந்த ஜமீன்தார் ஒரே மாதிரியான இரண்டு நாற்காலிகளை வைத்து அவ்விரண்டில் தான் மனத்தில் நினைத்த நாற்காலியில் உட்கார்ந்தால் மகான் என தீர்மானிக்கலாம் என எண்ணினார்.

வள்ளலார் வந்து எந்த நாற்காலியிலும் அமரவில்லை.

பேய் மாடியில் இருந்து கீழே விழுதல்

வள்ளலார் ஜமீன்மாளிகை நோக்கி வருவதை கண்டதும் மாடியில் பேய்பிடித்திருந்த மனைவி. இங்கே வராதே ! இங்கே வராதே ! என்ற சத்தம் போட்டது. வள்ளலார ஜமீன் மாளிகையை நெருங்கியதும் மாடியில் இருந்து வள்ளலார் கால் முன் கீழே விழுந்தார்.அங்கிருந்தவர்கள் பயந்து அவரை தூக்கி காப்பாற்ற முயன்றார்கள். வள்ளலார் பிச் என்று சொல்லி யாரும் நெறுங்காதீர்கள் என்றார். 

பேய் பிடித்த மனைவி மாடியில் இருந்து கீழே விழுந்ததால் உடம்பில் எந்தவிதமான காயமும் அடியும் படாமல் பேய் அகன்று விட்டது. ஜமீன்தார் அருகில் மனைவிக்குண்டான அச்சம். மடம். நாணம். வெட்கம் போன்ற அடக்கத்துடன் சென்று நின்றுகொண்டு வள்ளலாரை நோக்கி இருவரும் இருகரம் கூப்பி வணங்கினார்கள்.

வயிற்று வலி அகன்றது

அடுத்து தீராத வயிற்று வலியால் அவதிப்படும் மனைவி. வீட்டின் உள்ளே கட்டிலில் படுத்திருப்பதை கண்ட வள்ளலார் அருகில் சென்று வாயைத் திறக்க சொல்லி ஏதோ ஒன்று கொடுத்து வாயில்போட்டு தண்ணீர் குடிக்கச் சொன்னார். சிறிது நேரத்தில் தீராத வயிற்றுவலி போன இடம் தெரியாமல் அகன்று விட்டது. இந்த மனைவியும் சாதாரணமாக எழுந்து ஜமீன்தார் அருகில் சென்று வள்ளல்பெருமானை நோக்கி ஜமீன்தாரும் இரண்டு மனைவிகளும் ஆக மூவரும் கைகூப்பி வணங்கினார்கள்.

இனிமேல் எல்லாம் நல்லதே நடக்கும் என்று சொல்லிவிட்டு வெளியில் வந்து ஜமீன்தார் மனதில் நினைத்திருந்த நாற்காலில் அமர்ந்தார்.

ஜமீனுக்கு என்ன செய்வதென்றே ஒன்றும் புரியாமல் நடுங்கினார்.

இவர்தான் உண்மையான மகான். எங்கள் குறைகள் எல்லாம் தீர்க்க வந்த தெய்வம் என மூவரும் மனதில் நினைத்தவாறு வணங்கி வேண்டினார்கள். 

வள்ளல்பெருமான் எண்ணத்திற்கு இணங்க எதாவது செய்ய வேண்டும் என் எண்ணினார்கள்.

சுவாமி நாங்கள் என்ன செய்ய வேண்டும் கட்டளை இடுங்கள் உடனே செய்கிறோம் என வேண்டினர்.

அதற்கு வள்ளலார் நீங்கள் ஒன்றும் செய்ய வேண்டாம்.

உங்கள் கட்டுபாட்டில் உள்ள சிறு தெய்வங்களுக்கு உயிர்பலி செய்யாமல் தடுத்தால் போதும் என்று சொல்லிவிட்டு விடைபெற்று சென்றுவிட்டார்.

வள்ளலார் பாடல்!

” துண்ணெனக் கொடியோர் பிறவுயிர் கொல்லத் தொடங்கிய போதெலாம் பயந்தேன்

கண்ணினால் ஐயோ பிறஉயிர் பதைக்கக் கண்ட காலத்திலும் பதைத்தேன்

மண்ணினில் வலையும் தூண்டிலும் கண்ணி வகைகளும் கண்டபோ தெல்லாம்

எண்ணி என் உள்ளம் நடுங்கிய நடுக்கம் எந்தைநின் திருவுளம் அறியும்.! “

மேலே கண்ட பாடல் வள்ளலாரின் உயிர் இரக்கம் பற்றி வெளிப்படுத்துகிறது.  

வள்ளலார் வாக்கை சிரமேற்கொண்டு தெய்வங்கள் பெயரால் உயிர்பலி செய்வதை ஜமீன்தார் நிறுத்திவிட்டார்.

அடிக்கடி மனைவிகளுடன் வடலூர் சென்று வழிபடுவதை வழக்கமாக கொண்டார்கள்.

ஏழைகளின் பசிப்பிணியை போக்க

சத்திய தருமச்சாலைக்கு வேண்டிய அரிசி பருப்பு மற்றும் காய்கறிகள் வண்டி வண்டியாக வழங்கி வந்துள்ளார்கள்.

நான் முப்பது ஆண்டுகளுக்கு முன் வேட்டவலம் ஜமீன் அரண்மனைக்கு சென்று இருந்தேன். அவர் பேத்தியின் மகள் லலிதா ஜமீன் அவர்கள் அங்கு இருந்தார்கள் அவர்களிடம் வெகுநேரம் உரையாடினேன்.

அவர் மாடிக்கு என்னை அழைத்து சென்று அங்குள்ள பழைய இரும்பு பெட்டியை திறந்து காட்டினார் அதில் ஆறு திருமுறை அடங்கிய திருஅருட்பா நூல் மங்கிய ( கருப்பு கலருடன்) பேப்பருடன் இருந்தது. அவற்றை என்னிடம் கொடுத்து நீங்களே ஞாபகமாக வைத்துக் கொள்ளுங்கள் என்று கொடுத்தார்.

மகிழ்ச்சியுடன் பெற்றுக் கொண்டு வந்தேன். 

வள்ளலார் சித்தி பெற்ற பின்பும் வடலூருக்கும் வேட்டவலம் ஜமீனுக்கும் நெருங்கிய தொடர்பு இருந்து வந்தது என்பது அனைவரும் அறிந்ததே. 

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !

கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *